பாய் தோஜ் பண்டிகை... 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சோட்டா ராஜனுடன் சகோதரிகள் சந்திப்பு
டெல்லி: சி.பி.ஐ. காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் அவரது சகோதரிகள் இன்று சந்தித்து பேசினர்.
வட இந்தியா முழுவதும் சகோதரர் நலனுக்காக சகோதரிகள் பூஜை செய்யும் பாய் தோஜ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தன் சகோதரர் சோட்டா ராஜனை சந்திக்க அனுமதிக்குமாறு அவரது சகோதரிகள் டெல்லி நீதிமன்ற நீதிபதியிடம் கோரினர்.
அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து இளைய சகோதரியான சுனிதா சாக்காராம் சவான் மற்றும் மூத்த சகோதரியான மாலினி சக்பால் ஆகியோர் நேற்று மாலை சுமார் 5.00 மணிக்கு சோட்டா ராஜனை சந்தித்தனர்.
சுமார் 10 நிமிடங்களுக்கு மட்டும் இந்த சந்திப்பு நடந்தது. இதில் ராஜனை அரவணைத்த அவரது சகோதரிகள், கண்ணீருடன் நலம் விசாரித்தனர்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியபோது கடைசியாக சகோதரிகளைத்தான் சோட்டா ராஜன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.