தாவூத் பற்றி அதிர்ச்சித் தகவல்களை கொட்டும் சோட்டா ராஜன்- போலீஸ் அதிகாரிகள் லிஸ்ட்டும் ரிலீஸ்
டெல்லி: நிழல் உலக தாதாவான தாவூத் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களை சோட்டா ராஜன் வெளியிட்டுள்ளதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து சோட்டா ராஜனை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று இந்தோனேசியாவில் இருந்து இந்தியா கொண்டு வந்தனர்.
தெற்கு டெல்லியில் லோதி சாலையில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. அலுவலகத்தை சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணை துவக்கம்:
சோட்டா ராஜனிடம் நேற்று காலை முறைப்படி விசாரணை தொடங்கியது. உளவுத்துறை, ரா, சி.பி.ஐ மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு அதிகாரிகள் என 4 குழுவினர் அடுத்தடுத்து சோட்டா ராஜனிடம் விசாரணை நடத்தினார்கள்.
முழு ஒத்துழைப்பு:
விசாரணைக்கு சோட்டா ராஜன் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். உளவுத்துறையினரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளிக்கிறார்.
தாவூத் பற்றி திடுக் தகவல்கள்:
குறிப்பாக பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் பற்றி ஏராளமான தகவல்களை கூறி வருகிறார். தாவூத் இப்ராகிம் பற்றி அவர் கூறும் சில தகவல்கள் உளவுத் துறையினருக்கு புதிதாக உள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் தங்கும் 3 ரகசிய இடங்களை சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகள்:
தாவூத் இப்ராகிமுடன் மும்பை போலீசார் சிலர் இப்போதும் தொடர்பில் உள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் சி.பி.ஐ.யிடம் சோட்டா ராஜன் கூறியுள்ளார். இந்த தகவல்கள் உண்மைதானா என்று சி.பி.ஐ.யின் மற்றொரு குழு ஆய்வைத் தொடங்கி உள்ளது.
ஆய்வுக்கு பின் நடவடிக்கை:
சோட்டா ராஜன் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் உள்ளதாக உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த தகவல்களை ஆய்வு செய்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.