பாக். எழுத்தாளரைக் கொல்ல திட்டம்- சோட்டா ஷகீல் கூட்டாளி கைது
ஆள் கடத்தல், கொலை, கொள்ளைக்கு பேர்போன பிரபல நிழல் உலக தாதா சோட்டா ஷகீல் கூட்டாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளி எழுத்தாளர் டரேக் பத்தா. இவரின் படைப்புகள் மீது அதிருப்தியடைந்ததால் டரேக் பத்தாவை கொல்வதற்கு சோட்டா ஷகீலின் கூட்டாளி ஜுனைத் சவுத்ரி என்பவர் திட்டமிட்டு வருவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வடகிழக்கு டெல்லியில் உள்ள வசிராபாத் சாலையில் அவரை டெல்லி சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் விபரம் எதையும் குறிப்பிடாத போலீசார் அந்த விபரங்களை ரகசியமாகப் பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சோட்டா ஷகீலுக்காக ஹவாலா பணத்தை கைமாற்றும்போது டெல்லி போலீசார் இவரை முதலில் கைது செய்தனர். பின்னர் நான்கு மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான ஜுனைத் சவுத்ரி சோட்டா ஷகீலை சந்தித்ததால் மீண்டும் கைதானார்.
அதன் பின்னரும் இவர் கூலிக்காக ஆள் கடத்துவது, கொலை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது, பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளி எழுத்தாளர் டரேக் பத்தாவை கொல்வதற்கு திட்டம் தீட்டிவந்த நிலையில் டெல்லி போலீசார் இவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.