மும்பையில் பிரபல தாதா சோட்டா ஷகில் கூட்டாளிகள் 2 பேர் கைது; 2 துப்பாக்கிகள் பறிமுதல்
மும்பை: மும்பையில் பிரபல தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்க தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளிகள் வர உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
விரைந்து செயல்பட்ட போலீசார் துப்பாக்கி முனையில் காரை மடக்கி, காருக்குள் சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் 2 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருரைவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் அஜ்கர் காசிம் சேக்(39), நசுருத்தீன் சமிமுத்தீன் சேக்(34) என்பதும், தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரை மிரட்டி பணம் பறிக்க வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.