சோட்டா ராஜனை தீர்த்துக் கட்டும் சோட்டா ஷகீலின் சதி முறியடிப்பு: 4 பேர் கைது
டெல்லி: தாதா சோட்டா ராஜனை கொலை செய்யும் தாதா சோட்டா ஷகீலின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
தாதா சோட்டா ராஜன் திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவரை கொலை செய்ய தாதா சோட்டா ஷகீல் திட்டமிட்டார். இதற்காக அவர் டெல்லியை சேர்ந்த ராபின்சன், ஜுனைத், யூனுஸ் மற்றும் மனிஷ் ஆகியோரை ஏற்பாடு செய்தார்.
அவர்களுடன் போனில் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் அவர்களின் செல்போன் பேச்சை இடைமறித்துக் கேட்டபோது ஷகீலின் திட்டம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அந்த 4 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன்(55) கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.