என்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்!
டெல்லி: சிகாகோவிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஒரு என்ஜினில் எண்ணெய்க் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக டோரன்டோவுக்குத் திருப்பி தரையிறக்கப்பட்டது.
இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. என்ஜின் ஒன்றில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதைக் கண்டுபிடித்த விமானி உடனடியாக அருகில் உள்ள டோரன்டோ விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வி்மானத்தை அங்கு தரையிறக்க அனுமதி கிடைத்தது.
இதையடுத்து பியர்சன் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சிகாகோவிலிருந்து கிளம்பிய இரண்டரை மணி நேரத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டது. விமானத்தில் மொத்தம் 432 பேர் இருந்தனர்.
எரிபொருள் அனைத்தையும் கீழே கொட்டி விட்டு அவசர கால சூழ்நிலையில் விமானம் தரையிறங்கியது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை டெல்லிக்கு அழைத்து வரும் வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறதாம்.