காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ப. சிதம்பரம் போட்டியிடலாமே: திக்விஜய் சிங் சவால்!
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் நேரு குடும்பத்தைச் சேராத எவரும் போட்டியிடலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ப.சிதம்பரம் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சோனியாவும் ராகுலும் மக்களிடம் அதிகம் பேச வேண்டும்; காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரும் என்று அண்மையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்திருந்தார்.
இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்தை நேரில் சந்தித்து தங்களது கருத்தை தெரிவிக்கலாமே தவிர ஊடகங்கள் மூலமாக பேசக் கூடாது என்று சிதம்பரத்துக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜசிங், சிதம்பரம் அல்லது நேரு குடும்பத்தைச் சேராத எவரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட சுதந்திரம் உண்டு. யாரும் அவர்களைத் தடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க ப.சிதம்பரம் மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.