தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
டெல்லி: டெல்லியில் வீடு வாங்கிய விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பவர் வி.எஸ்.சம்பத். 2011ம் ஆண்டுவாக்கில், ஐதராபாத்தில் இருந்த தனது குடும்ப சொத்து ஒன்றை விற்பனை செய்தார். அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு டெல்லியில் ரூ.1.66 கோடி செலவில் ஒரு வீடு வாங்கினார். இதில் சில சந்தேகங்கள் மத்திய வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவுக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும் இது வரி ஏய்ப்பு விவகாரம் இல்லை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், "இந்த விவகாரம் வரி ஏய்ப்புடன் தொடர்புடையது இல்லை. ஒரு சொத்தை விற்று மறு முதலீடு செய்வதற்கு சம்பத் தகுதி படைத்தவரா என்பதை தெரிந்துகொள்ள இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பத்திடமிருந்து விளக்கம் பெற்றபிறகு இந்த விவகாரத்தை முடிப்பதா அல்லது தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளன. இதுபற்றி அவர்கள் கூறுகையில், "3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு விடப்பட்ட வழக்கமான வேண்டுகோள்தான் இது. இதில் வருமான வரித்துறைக்கும், தலைமை தேர்தல் கமிஷனருக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடிதப்போக்குவரத்து நடந்து வருகிறது. இப்போது திடீரென இந்த விவகாரம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.