விவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
விவாகரத்து கேட்டு லோக் அதாலத் நீதிமன்றம் வந்த தம்பதியரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஹூப்ளி: கர்நாடகா மாநிலத்தில் நடந்த சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சியில், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வந்த தம்பதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரை வழங்கி இருவரையும் சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் புதியதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வந்தார். நீதிமன்ற கட்டிடங்களை திறந்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட லோக் அதாலத் என்கிற சிறப்பு நீதிமன்ற முகாமில் வழக்குகளை விசாரித்தார்.
அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் ஒரு தம்பதியினரின் விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தம்பதிகளை சேர்ந்து வாழ அறிவுரைகளைக் கூறினார். நீதிபதியின் அறிவுரையைக் கேட்ட தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்வதாக உறுதி கூறினர்.
இதைத் தொடர்ந்து, அந்த தம்பதிகள் தங்களுடைய விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, குழந்தைகளுடன் இருவரும் சேர்ந்து வாழ்வதாக உறுதியளித்ததொடு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த சிறப்பு நீதிமன்ற முகாமில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராம் 5 வழக்குகளை சிறப்பாக முடித்துவைத்தார்.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விவாகரத்து குறித்து கூறுகையில், "விவகாரத்து வழக்குகள் குடும்பத்தை பலவீனப்படுத்துகின்றன. இது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. பிரிந்து வாழும் தம்பதிகள் குழந்தைகளின் வருங்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு மீண்டும் இணைந்து வாழ வேண்டும்" என்று கூறினார்.