நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம்.. மோடி முன் கண்கலங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி !
டெல்லி: நீதித்துறை மீது ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது. நீதிபதிகள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கண்ணீர் மல்க உணர்ச்சிகர வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மேலும் தாக்கூர் பேசுகையில்,
2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர். இந்திய சிறைகள் நிரம்பி வழிகின்றன.
உயர் நீதிமன்றங்களில் 454 நீதிபதி பதவிகள் நிரப்பப்படமால் காலியாகவே உள்ளன. இதற்கு காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி) வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதே காரணம். ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் 2 கோடி வழக்குகளையே தீர்க்க முடிகிறது.
கடந்த 1987-ம்ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு 10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை தாக்கூர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களையும், நீதித்துறையின் சுமையையும் குறைத்து இந்திய நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பேசி முடித்து எழுந்து பேசிய பிரதமர் மோடி நமது அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை வலுப்படுத்த இதுவே சரியான தருணம். என்று குறிப்பிட்டார். மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.