ரயில்வே கேட்டை கடந்து ஆட்டோவில் பயணம்.. முதல்வர் உம்மன் சாண்டி ஸ்டண்ட்
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி மூடப்பட்ட ரயில்வே கேட்டினை கடந்து பள்ளி விழாவில் பங்கேற்க ஆட்டோவில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குமார நல்லூரில் புகழ்பெற்ற யோக ஷேமா சபை உயர் நிலைப்பள்ளி உள்ளது. நேற்று அந்த பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் உம்மன் சாண்டி அரசு காரில் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தார். அவரது கார் குமாரநல்லூரில் சென்று கொண்டிருந்தபோது, கன்னியாகுமரி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக அந்த வழியில் இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.
இதனால், பள்ளி விழாவுக்கு தாமதமாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக, முதல்வர் உம்மன்சாண்டி தனது காரில் இருந்து இறங்கி ரயில் தண்டவாளத்தை கடந்து மறுபுறம் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
இதை சற்றும் எதிர்பாராத முதல்வரின் பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்து, அவர்களும் அவசர அவசரமாக தண்டவாளத்தை கடந்து வேறொரு ஆட்டோவில் பின் தொடர்ந்தனர்.
முதல்வர் ஆட்டோவில் வந்து இறங்கியதை பார்த்த பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிப்போய் அவரை வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் முதல்வரின் அரசு கார் பள்ளிக்கு வந்து சேர்ந்தது. விழா முடிந்ததும் முதல்வர் உம்மன்சாண்டி அரசு காரில் ஏறி தனது அலுவலகத்திற்கு சென்றார்.
முதல்வர் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுனர் கூறும்போது, ''இந்த சம்பவத்தை என்னால் நம்பவே முடியவில்லை. சாதாரண பயணியைப் போல முதல்வர் உம்மன் சாண்டி எனது ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார். நான் பணம் வேண்டாம் என்று கூறியபோதும் 100 ரூபாயை எனது சட்டைப் பையில் வைத்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்றார்.
முதல்வர் என்ற பந்தாவெல்லாம் இல்லாமல் இதுபோன்று அரசு காரை எதிர்பார்க்காமல் ஆட்டோவில் செல்வது உம்மன் சாண்டிக்கு புதியது அல்ல.
கடந்த மாதம் கூட டெல்லி சென்று விட்டு திருவனந்தபுரம் திரும்பிய உம்மன் சாண்டி, விமான நிலையத்திற்கு வெளியே வந்துபார்த்தார். ஏதோ காரணத்தினால் அவரை அழைத்துச் செல்ல வேண்டிய அரசு கார் வரவில்லைல். உடனே ஒரு ஆட்டோவை பிடித்து தலைமைச் செயலகம் சென்று சேர்ந்தார் உம்மன் சாண்டி.
எளிமையை கடைபிடிக்கிறேன் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தாலும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து சில மாநில முதல்வர்கள் இப்போது ஸ்டண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். அதில் கேரள முதல்வரும் ஒருவர்.
அதெல்லாம் சரிதான் ரயில் வருகைக்காக மூடப்பட்ட கேட்டினை உம்மன் சாண்டி கடந்து மறுபுறும் சென்றது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? என்பது எதிர்கட்சியினரின் கேள்வி.