டெல்லியை வேகமாக அச்சுறுத்தும் “டெங்கு”- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
டெல்லி: டெல்லியில் வேகமாக காய்ச்சல் பரவி வருகின்ற காரணத்தினால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்குவால் பாதிக்கப்பட்டு கடந்த 12 ஆம் தேதி இந்துராவ் மருத்துவமனையில் 6 மாத குழந்தை அனிஷ்கா உயிர் இழந்தது. அதே போல் போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுர்ஜீத் சிங் என்பவரும் இறந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் கடந்த 12 ஆம் தேதி வரை மொத்தம் 1872 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.
டெங்கு பரவுவதை தொடர்ந்து மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்களின் விடுமுறையை அரசு ரத்து செய்துள்ளது. விடுமுறையில் இருக்கும் டாக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருந்தாளுனர்கள், பரிசோதனைக்கூட தொழில் நுட்ப பணிகள் போன்றவர்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு படுக்கைகள், மருந்து மாத்திரைகள் போன்றவற்றையும் தேவையான அளவுக்கு வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பிரிவை தொடங்கவும், அந்தந்த பகுதிகளில் நோய் கண்டுபிடிப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே டெல்லியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்காக படுக்கை வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நாட்டா உத்தரவிட்டுள்ளார்.