குழந்தை கடத்தல் வதந்தி: மகாராஷ்டிராவில் 2 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேர் மீது தாக்குதல்
மாலேகாவ்ன்: மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 5 பேரை மக்கள் தாக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் பெண் குழந்தையிடம் பேச முயன்ற ஒருவர் உள்பட 5 பேரை பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர். அவர்கள் குழந்தை கடத்தும் கும்பல் என்று தவறாக நினைத்து அடித்துக் கொன்றுவிட்டனர்.
வாட்ஸ்ஆப்பில் வரும் குழந்தை கடத்தல் வதந்திகளால் அப்பாவிகளை பிடித்து அடித்துக் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவ்னில் குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி ஒரு கும்பல் 2 வயது ஆண் குழந்தை, 2 பெண்கள் உள்பட 5 பேரை தாக்கியுள்ளது.
இதை பார்த்த உள்ளூர்வாசிகள் இரண்டு பேர் ஓடி வந்து அந்த 5 பேரையும் ஒரு வீடு மற்றும் மில்லுக்குள் அடைத்து பூட்டி அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். 130 போலீசார் வந்து போராடி அந்த 5 பேரையும் மீட்டுள்ளனர். பர்பானி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த 5 பேர் ஊருக்கு திரும்பிச் செல்ல பணம் இல்லாததால் யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்து மாலேகாவ்னுக்கு வந்துள்ளனர்.
அவர்களை தாக்கியது தொடர்பாக 250 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த கும்பல் போலீஸ் வேன், ஒரு பைக்கையும் சேதப்படுத்தியுள்ளது.
அந்த 5 பேரின் உயிரை காப்பாற்றிய 2 பேரை போலீசார் பாராட்டியுள்ளனர்.