பால்ய வயதுத் திருமணம் பலாத்காரத்தை விட கொடியது: டெல்லி கோர்ட் கண்டனம்
டெல்லி: பால்ய வயதில் திருமணம் செய்து வைப்பது என்பது பலாத்காரத்தை விட கொடியது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற திருமணங்கள் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தங்களது மகளை அவளது கணவர் வீட்டார் காரும், கூடுதல் பணமும் வரதட்சணையாகக் கேட்டு துன்புறுத்துவதாக ஒரு தம்பதி போலீசில் புகார் செய்திருந்தனர். இது தொடர்பாக மகளின் கணவர் வீட்டார் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்குமாறு கோரி டெல்லி நீதிமன்ற உதவியை அவர்கள் நாடினர்.
அந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு கடந்த 2011ம் ஆண்டு 14 வயதில், அதாவது திருமண வயதிற்கு முன்னதாகவே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஷிவாணி சவுகான், சட்டப்படி வரதட்சணை வாங்குவதும், பெறுவதும் குற்றம் எனத் தெரிவித்தார். மேலும், திருமண வயதை எட்டுவதற்கு முன்னதாக சிறுமிகளுக்கு நடத்தி வைக்கப்படும் திருமணங்கள், பாலியல் பலாத்காரங்களை விட கொடுமையானவை என அவர் குறிப்பிட்டார்.
இறுதியில், பால்ய திருமணம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மீதும், வரதட்சணை கொடுமை தொடர்பாக பெண்ணின் கணவர் குடும்பத்தார் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.