கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியின் குடும்ப நிறுவன வீட்டில் குழந்தைகள் ஆபாச படங்கள் பறிமுதல்
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த லோக்ஆயுக்தா ஊழல் குறித்த விசாரணையில் போலீசார் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் வீட்டில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்கள் இருந்த ஹார்டு டிஸ்கை பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகத்தில் நடந்த லோக்ஆயுக்தா ஊழல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லோக்ஆயுக்தா போலீசார் ஐஏஎஸ் அதிகாரி கபில் மோகனின் தந்தையும்(நரேஷ் மோகன்), மகனும்(அஹான் மோகன்) நடத்தும் பிகேஎஸ் பைனானஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தினர். கபில் மோகன் கர்நாடக மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் தலைமை செயலாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நடந்த சோதனையில் ஹார்டு டிஸ்க் ஒன்று கிடைத்தது. அதன் பிறகு சிஐடி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4.37 கோடி ரொக்கமும், 2.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த ஹார்ட் டிஸ்கில் ஒரு குழந்தைகள் ஆபாச படமும், பெரியவர்கள் ஆபாச படங்களும் இருந்துள்ளது. ஆனால் டிஸ்கில் வெளிநாட்டு குழந்தைகள் ஆபாச படங்கள் நூற்றுக்கணக்கில் இருந்ததாக கூறப்படுகிறது. டிஸ்கில் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆவணங்கள் இருந்துள்ளது. அந்த டிஸ்க் கபில் மோகனுடையது என்று கூறப்படுகிறது.
குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது, வீடியோக்கள் வைத்திருப்பது, டவுன்லோடு செய்வது குற்றம் ஆகும். இந்நிலையில் லோக் ஆயுக்தா போலீசார் அந்த ஹார்டு டிஸ்கை பெங்களூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நேற்று யஷ்வந்த்பூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லோக்ஆயுக்தா ஊழல் மூலம் கிடைத்த பணத்தை கபில் மோகன் பிஎஸ்கே பைனான்ஸில் முதலீடு செய்ததாக நம்பப்படுவதால் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.