மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலில் தள்ளப்படும் சிறுமிகளுக்கு தண்டனை- காமவெறியர்களுக்கு மன்னிப்பாம்
மகாராஷ்டிராவில் அரங்கேறும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து வாசகர் ஒருவர் அதிர்ச்சிகரமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
மும்பை : குழந்தைகள் என்றும் பாராமல் தங்களது காம இச்சைகளை தீர்த்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படும் குழந்தைகளை மட்டும் மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தால் மனம் கொதித்த ஒருவர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார், நாமும் அவருக்கு ஆதரவு அளிப்போமே.
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பது சொல்லி மாளாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவதே ஆபத்தான விஷயம் தானோ என்று எண்ணும் அளவிற்கு வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களின் செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
மஹாராஷ்டிரா மாநிலத்திலும் அப்படித் தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 14 வயது சிறுமி ஒருவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு அவரை பருவமெய்திய பெண் போல காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது ஒரு கும்பல். குழந்தைகள் என்றும் பாராமல் தங்களின் காம வெறியை தீர்த்துக் கொள்ளும் ஆண்கள் இந்த குழந்தைகளுக்கு கொடுப்பது வெறும் ரூ. 100 தான்.
போலீசார் சோதனை
இதில் கொடுமையின் உச்சமான விஷயம் என்னவென்றால் ஹார்மோன் ஊசி போடப்பட்ட அந்த சிறுமி ஒரு நாளில் 30 ஆண்களுடன் உறவு கொள்ளும் கொடூரத்தையும் அனுபவித்துள்ளாராம். அண்மையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆண்களையும் கைது செய்ய வேண்டும்
அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட சிறுமிகள், இடைத்தரகர்களை கைது செய்த போலீசார். சிறுமிகளிடம் உல்லாசம் அனுபவித்த ஆசாமிகளை மட்டும் மன்னித்து விட்டுவிட்டார்களாம். போலீசாரின் இந்த செயலைப் பார்த்து நொந்துபோன ஒருவர், மகாராஷ்டிரா முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிறுமிகளிடம் காமக்களியாட்டம் நடத்தும் ஆண்களை கைது செய்ய வலியுறுத்தும் விதமாக ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
சிறுமிகள் காக்கப்பட வேண்டும்
சிறுமிகளிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு எந்த குற்றஉணர்ச்சியும் இல்லாமல் இவர்கள் சுகபோக வாழ்க்கை நடத்துகின்றனர். நாளுக்கு நாள் இவர்களின் வெறித்தனம் அதிகரிப்பதால் ஆபத்து இந்த சிறுமிகளுக்கு மட்டுமல்ல எதிர்கால சிறுமிகளுக்கும் தான். சமூகத்தில் நல்ல வேஷம் போட்டுக் கொண்டு திரியும் இது போன்ற காம விலங்குகளின் முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டும்.
ஒரு கையெழுத்து போடலாமே
எதிர்கால பெண் பிள்ளைகளை காக்கும் பொருட்டு இவரின் இந்த நல்ல முயற்சிக்கு நாமும் ஒரு கையெழுத்து போட்டு ஆதரவு தெரிவிக்கலாமே. நல்ல தொடக்கம் எங்கிருந்து வந்தாலும் அதற்கு நாமும் நம்மால் முடிந்த ஆதரவை தெரிவிப்போம், நல்ல சமூகத்தை வளர்த்தெடுப்போம்.