குழந்தைகளைப் போற்றும் நேரு மாமாவின் 126வது பிறந்தநாளான “குழந்தைகள் தினம்” இன்று!
டெல்லி: குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 126வது பிறந்த தினமான நவம்பர் 14ஆன இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, "குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்" என்றார்.
குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவரது காலத்தில் அன்பு வைத்திருந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் முக்கிய நிலையில் உள்ளனர்.
அன்பான நேரு மாமா:
இவர்களது குழந்தைகளும் நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை அறிந்து அவர் மீது பாசம் கொள்கின்றனர். நேரு மறைந்துவிட்ட போதும், காலம் காலமாக அவரது அன்பு குழந்தைகள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கிறது.
மலர்தூவி மரியாதை:
குழந்தைகளுக்கு அன்பான மாமாவாக திகழ்ந்த நேருவின் 126வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மேலிட தலைவர்கள் ஆகியோரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
குதூகலமான குழந்தைகள் தினம்:
உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் முதல் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ஆம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா அறிவித்தது. எனினும் நவம்பர் 14 ஆம் தேதிதான் இந்தியாவில் குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.