உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை டோக்லாம் எல்லையில் குவித்த சீனா
டோக்லாமில் மீண்டும் சீனா ராணுவத்தினர் குவிக்கபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பூடான் எல்லையில் டோக்லாமில் உறைய வைக்கும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை சீனா திடீரென குவித்திருப்பதால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- பூடான் -சீனா நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பீடபூமியில் சீனா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. டோக்லாம் பூடானுக்கு சொந்தமானதாக இருந்தாலும் அதன் பாதுகாப்பு பொறுப்பில் இந்திய ராணுவமே உள்ளது.
இதை பொருட்படுத்தாமல் அண்மைக் காலமாக சீனா ராணுவத்தினர் முரட்டுத்தனமாக அத்துமீறுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது ராணுவ வீரர்களும் டோக்லாம் எல்லையில் அதிக எல்லையில் குவிக்கப்பட்டனர்.
இதனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டோக்லாம் பீடபூமி போர்க்களமாக உருமாறிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் இந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் திடீரென கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை டோக்லாமில் சீனா குவித்துள்ளது. அத்துடன் அங்கு ஹெலிபேடு தளங்களையும் சீனா அமைத்துள்ளது. சீனாவின் இந்த திடீர் அத்துமீறலால் டோக்லாமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.