எங்க வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்... கைது செய்யப்பட்ட வீரரை விடுவிக்க சீனா கோரிக்கை
ஸ்ரீநகர்: இந்தியப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த சீன வீரரைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீன ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது
இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு பாதுகாப்புப் படைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி நுழைந்த சீன வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக இந்திய ராணும் நேற்று அறிவித்தது. லடாக் பாங்சாங் ஏரியின் தெற்கே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இது குறித்து சீன ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா கூறியிருந்தது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் செய்தி நிறுவனமான பி.எல்.ஏ. டெய்லி இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெள்ளிக்கிழமை எல்லைப் பகுதியில் பணியிலிருந்த சீன வீரர் ஒருவர் காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் காணாமல்போன சீன வீரரைக் கண்டுபிடித்ததாக தங்களுக்குப் பதில் அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் அறிவுறுத்தல்களின்படி சீன வீரர் திருப்பி அளிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்றும் இந்திய கூறியதாக பி.எல்.ஏ. டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில்...திரிணாமுல் தொண்டர்களால்... பாஜக அலுவலகம் சூறை...பாஜக பரபர குற்றச்சாட்டு!
கைது செய்யப்பட்ட அந்த வீரரை இந்திய அதிகாரிகள் உடனடியாக சீனாவிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்றும் எல்லைப் பகுதியில் அமைதியை இரு நாடுகளும் கூட்டாகப் பராமரிக்க வேண்டும் என்றும் பி.எல்.ஏ. டெய்லியில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஜூலை மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல சீன ராணுவத்தைச் சேர்ந்த 43 பேரும் இதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இது எல்லையில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.