லடாக் பகுதியில் திபெத் தேசியக் கொடி ஏற்றம்... இந்தியா மீது சீனா குற்றச்சாட்டு
சீன எல்லையை ஒட்டிய இந்திய பகுதியில், திபெத் நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் தூண்டுதலே காரணம் என்று சீனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: சீன எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதியில் திபெத் கொடியேற்றப்பட்டதற்கு இந்தியாவின் தூண்டுதலே காரணம் என்று சீனா குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் எல்லையில் இந்தியா - திபெத் - பூடான் இடையே எல்லை வரையறுக்கப்படாத பகுதியில், அண்மைக்காலமாக நடக்கும் சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் ராணுவ படைகளை லடாக் ஒட்டிய பகுதியில் படைகளை குவித்து வருவதால் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் சீன எல்லைக் கோட்டுப் பகுதி அருகே உள்ள பாங்கோங் ஏரிக் கரைப் பகுதியில் திபெத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்திய அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே திபெத் பிரிவினைவாதிகள் தேசியக் கொடியை ஏற்றியதாக சீன பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன.
சிக்கிம் எல்லைப் பிரச்சினையில் இந்தியா திபெத்தை ஒரு கருவியாக பயன்படுத்த முயல்வதாகவும் சீன ஊடகங்கள் புகார் கூறியுள்ளன. ஏற்கெனவே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள இந்திய சீன எல்லைப்பகுதியில், இந்த விவகாரம் மேலும் சிக்கலைக் கூட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீருக்குள் சீன படைகள் நுழையும் என சீனா, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.