ஆளே இல்லாத 'செட்டப்' கிராமங்கள் - சீனாவின் தந்திர போர் யுக்தி!
சிக்கிம்: இந்திய - சீனா எல்லைப் பகுதிகளில் பதுங்கு குழிகளுடன் பல ஒருங்கிணைந்த கிராமங்களை சீனா உருவாக்கி வைத்துள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ படை தான் அந்நாட்டின் முன்னணி இராணுவ பிரிவாகும். அப்படிப்பட்ட ராணுவ படை கொண்டு எல்.ஏ.சி எனும் Line of Actual Control அருகே உள்கட்டமைப்பு எனும் போர்வையில், வீடுகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சாலைகள் போன்றவற்றை சீனா உருவாக்கியுள்ளது.
இது, கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான இராணுவ மோதலுக்காக, தனது இராணுவ பலத்தை மேம்படுத்துவதற்கான சீனாவின் புதிய போர் யுக்தியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இந்திய - சீன எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் பொதுமக்கள் எவரும் இல்லாததால், இந்த 'செட்டப்' கிராமங்கள் சீன ராணுவத் துருப்புகளின் விரிவாக்கமாகவே காணப்படுகின்றன.
இப்படியே மக்களே இல்லாத பல கிராமங்கள் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் 2017 டோக்லாம் நிலைப்பாட்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. மக்களே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மர்ம கிராமங்கள் சீனாவின் மோசடி யுக்தியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.
உண்மையில், இந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில், இராணுவ சேமிப்பு பதுங்கு குழிகளும் காணப்படுகின்றன. தவிர, இந்த கிராமங்களில் உளவு பார்க்கும் உயர் கோபுரங்களும் உள்ளன.
சீனா, ஏற்கனவே அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் கிழக்கு பகுதிக்கு எதிரே இதுபோன்ற இரண்டு டஜன் கிராமங்களை அமைத்துள்ளது. முன்னர் நிறுவப்பட்ட சில கிராமங்கள் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலைகளைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஒருங்கிணைந்த கிராமங்கள் நிறுவப்படுவது, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ படைக்கு பெரும் சாதகமாக அமைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.