கல்வான் தாக்குதலில் எங்களின் 4 அதிகாரிகள், வீரர்கள் உயிரிழப்பு... ஒருவழியாக ஒப்புக் கொண்ட சீனா!
பீஜிங்: கல்வான் தாக்குதலில் 4 சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்ததாக சீனா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
அந்த 4 அதிகாரிகளுக்கும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு விருது அறிவித்துள்ளதாகவும் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான 'பீப்புள்ஸ் டெய்லி'யில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனாவின் அடாவடி
இந்தியாவின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வழக்கமாக வாலாட்டி வரும் நிலையில் சீனாவும் இந்திய எல்லைக்குள் மூக்கை நுழைக்க தொடங்கியது. லடாக்கில் உள்ள இந்திய-சீனா எல்லையில் சீனா தனது படைகளை குவிக்க தொடங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சீனா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம்
இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது சீன ராணுவ வீரர்கள் கொடூரமாக கற்களை கொண்டு இந்திய வீரர்களை தாக்கினார்கள். இந்திய வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
45 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்திய தங்கள் வீரர்கள் 20 பேர் பலியானதை அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொண்டது. ஆனால் சீனா தங்கள் தரப்பு வீரர்கள் உயிரிழைப்பை தொடர்ந்து மறுத்து வந்தது. கல்வான் சம்பவத்தில் சீன ராணுவத்தினர் 45 பேரும் பலியானதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் சமீபத்தில் கூறி இருந்தது.
முதன்முறையாக ஒப்புக் கொண்ட சீனா
இந்த நிலையில் கல்வான் தாக்குதலில் 4 சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான 'பீப்புள்ஸ் டெய்லி'யில் இது தொடர்பாக கூறுகையில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களின் அத்துமீறலை தடுக்க முயன்ற 4 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். அந்த 4 அதிகாரிகளுக்கும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு விருது அறிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.