1000 கி.மீ சுரங்கம் அமைத்து, பிரம்மபுத்திரா நதியை 'கடத்த' சீனா திட்டம்! பகீர் தகவல் அம்பலம்
டெல்லி: பிரம்மபுத்ரா நதியை 1,000 கி.மீ. தூரம் சுரங்கம் அமைத்து 'கடத்தி' செல்ல அந்த நாட்டு பொறியாளர்கள், அரசிற்கு அறிக்கை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில்தான் பிரம்மபுத்ரா நதி உருவாகிறது. இந்தியாவில்தான் இதற்கு பிரம்மபுத்திரா என்று பெயர். சீனாவில் அந்த நதி யர்லங் ட்சங்போ என்று அழைக்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்கள்
பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும்.
செய்தித்தாள் தகவல்
இந்த நிலையில்தான், ஹாங்காங்கிலிருந்து வெளியாகும், 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி இந்தியாவை தூக்கி வாரிப்போட்டுள்ளது.
சுரங்கப்பாதை
பிரம்மபுத்ரா நதியில், திபெத்தின் சங்ரி கவுன்டி என்ற இடத்திலிருந்து ஷின்ஜியாங்கில் உள்ள டக்லமஹன் என்ற இடத்திற்கு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதை தோண்டி சீனா தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் திட்டம் தயாரித்துள்ளதாகவும். இதை தயாரித்த பொறியாளர்கள் அதை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா மறுப்பு
இதனிடையே சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறுகையில், இந்த தகவல் துரதிருஷ்டவசமானது. அதில் உண்மையில்லை. எல்லை தாண்டி செல்லும் நதி தொடர்பான ஒப்பந்தத்திற்கு சீனா வழக்கம்போல முக்கியத்துவம் அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.