கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 10 ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெற்ற சீனா
கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நிறுத்தப்பட்டு இருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக்: கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா ராணுவம் இடையே படை வீரர்களை விலக்கி கொள்வது தொடர்பாக பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை இந்தியா சீனா உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்திய, சீன எல்லை கட்டுப்பாடு பகுதி அருகே கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், ஆகஸ்ட் 29ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியிலும் சீன துருப்புகள் அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சித்தபோது இந்திய படைகள் பதிலடி கொடுத்ததை அடுந்து அந்த முயற்சி தடுக்கப்பட்டது. ஒரு பக்கம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு, மறுபக்கம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலையில் சீனா ஈடுபட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இரவு சீன துருப்புகள் எல்லை தாண்டிய போது நம் நாட்டு ராணுவ வீரர்கள் தடுத்தனர். இதில் கடும் சண்டை நிகழ்ந்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய சீன ராணுவம் அந்த பழியை இந்தியா ராணுவத்தின் மீது போட்டு உலக அரங்கில் நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொண்டது.
இதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எல்லையில் இருந்து சீன துருப்புகள் முகாம்களுக்கு விரைவில் திரும்பி விடும் என சீனா கூறியது. நரித்தனம் செய்த சீனா, எல்லையில் படைகளை குவித்து பதற்ற நிலையை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் இரு நாட்டு தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இந்தியா மற்றும் சீன படைகளை எல்லையில் இருந்து திரும்ப பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால் எல்லை பகுதியில் சற்று பதற்றம் தனிந்தது.
எல்லையை பதற்றத்தை குறைப்பதற்காக இரு தரப்பினரும் ஒன்பதாவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்தியாவும் சீனாவும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இந்த நிலையில் கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த பத்தாயிரம் பேரும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், முன்களப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருதரப்பு வீரர்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக சீன ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தெற்கு கரையில், இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணைக்கு பிறகு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கிழக்கு லடாக்கின் சுசுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு சீனாவிடம் அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக டெல்லி பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்திய பகுதிக்குள் நுழைந்ததால், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சீன வீரரின் வருகை இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட எல்லை ஒழுங்குமுறை நடைமுறையின்படி உள்ளது என்று ஜின்குவா பல்கலைக்கழகத்தின் சீனாவின் தேசிய வியூக நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் கியான் ஃபெங், கூறினார்.
எங்க வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்... கைது செய்யப்பட்ட வீரரை விடுவிக்க சீனா கோரிக்கை
நான்கு நாட்களுக்குள் சீன வீரரைத் திருப்பி அனுப்புவதன் மூலம் எல்லைப் பதட்டத்தை தணிப்பதில் இந்தியா நல்லெண்ணத்தைக் காட்டியது என்று அவர் கூறினார். சீன இராணுவம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீரர் திரும்புவதை ஒப்புக் கொண்டது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்களின்படி இந்திய தரப்பினரால் சீன எல்லைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்தியா - சீனா ராணுவம் இடையே படை வீரர்களை விலக்கி கொள்வதற்கு பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை இந்தியா சீனா உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.