புது தலைவலி.. லடாக்கை யூனியன் பிரதேசமாக்கியதற்கு சீனா எதிர்ப்பு.. ஏற்க முடியாது என்று சீற்றம்
Recommended Video
டெல்லி: லடாக் தனி யூனியன் பிரதேசமாக இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளதற்கு, சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், கிழக்குப் பிராந்தியமான லடாக் பகுதியை பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவித்து உள்ளது மத்திய அரசு. அதேபோன்று ஜம்மு காஷ்மீரும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
மற்றொரு பக்கம் லடாக் விஷயத்தில் சீனாவும் மூக்கை நுழைக்கிறது. இதனால், கிழக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பகையையும் சம்பாதித்துள்ளது இந்தியா.
ஏனெனில் லடாக் என்பது சீனாவின் எல்லையை ஒட்டிய பிராந்தியத்தில் வரக்கூடியதாகும். மேலும் இங்கு வசிக்கும் சுமார் 75 சதவீத மக்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எல்லையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நடுவே சில பிரச்சினைகள் உள்ளன. இந்த நிலையில் சீனா தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சீனாவின் எல்லைப் பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தியதை எப்போதுமே எதிர்த்து வந்துள்ளோம். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சமீப காலமாக இந்திய அரசு சீனாவின் எல்லைப்புற இறையாண்மையை குறைத்து மதிப்பிடுகிறது. தன்னிச்சையாக தங்களது உள்நாட்டு சட்டங்களை திருத்திக் கொண்டு உள்ளது.
இந்திய அரசின் இந்த செயல்பாடு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் எந்த பலனும் கிடைக்காது. எல்லைப்புற விவகாரங்களில் இந்தியா தனது வார்த்தைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இரு நாடுகள் நடுவேயான ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும். எல்லை பகுதிகளை உள்ள பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் செயல்பாட்டில் இந்தியா ஈடுபடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் கருத்து கூறப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியானது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் நடுவேயான வரலாற்று தொடர்புடைய பிரச்சனை இது. தற்போது இது சர்வதேச சமூகத்தின் பார்வையிலும் உள்ளது. தற்போதைய நிலைமையை மாற்றும்போது தன்னிச்சையாக எந்த ஒரு நாடும் தனது முடிவை எடுக்கக் கூடாது என்பதே சீனாவின் நிலைப்பாடு. இவ்வாறு சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.