லடாக் எல்லையில் குவிக்கப்படும் படை.. மோதலுக்கு காரணமே சீனாதான்.. இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு!
லடாக்: லடாக் எல்லையில் கடந்த ஒரு வருடமாக நடக்கும் எல்லை மோதலுக்கு சீனாவின் அத்துமீறலும், படை குவிப்பும்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த வருடம் மே மாதத்தில் இருந்தே லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் கல்வானில் மிக பெரிதாக வெடித்தது.
கல்வான் மோதலுக்கு பின் இரண்டு தரப்பும் எல்லையில் படைகளையும், ஆயுதங்களையும் குவித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் எல்லையில் இரண்டு தரப்பும் குறிப்பிட்ட அளவு படைகளை பின்வாங்கிக்கொள்ள முடிவு செய்தன.
லடாக் எல்லையில்.. இந்திய-சீன வீரர்கள் மீண்டும் உரசல்?.. வெளியான தகவல்.. இந்திய ராணுவம் மறுப்பு!
பாங்காங்
முக்கியமாக பாங்காங் திசோவில் பல்வேறு கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து சீனா மற்றும் இந்திய படைகள் பின்வாங்கின. ஆனால் தற்போது மீண்டும் எல்லையில் சீனா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் எஸ் 400 ரக ஆயுதங்களை எல்லையில் சீனா குவித்து வருகிறது. வான் ரீதியான மோதலுக்கு தயாராகும் வகையில் சீனா இப்படி செய்கிறது.
கிழக்கு
தற்போது கிழக்கு லடாக்கில் இந்திய எல்லை அருகே சீனா படைகளை குவிப்பதையும், கட்டுமானங்களை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தையை மீறி சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் இப்படி படைகளை குவிப்பது பாதுகாப்பு கருதிதான் என்று சீனாவின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
விளக்கம்
பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து எல்லையை காக்க வேண்டும் என்றுதான் படைகளை குவிக்கிறோம். இது சாதாரண விஷயம்தான் என்று சீனா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சீனாவின் ஆக்கிரமிப்புகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதில், லடாக் ஈல்லையில் நடக்கும் மோதலுக்கு சீனாதான் காரணம்.
காரணம்
கிழக்கு லடாக் பகுதியில் சீனா அதிக அளவில் படைகளை குவித்ததும், கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்ய முயற்சி செய்ததும்தான் எல்லையில் நிலவும் மோதலுக்கு காரணம். சினோ - இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக சீனா செயல்படுகிறது. சீனாவின் இந்த செயல்பாடுகள் அமைதியை குலைக்கும் வகையில் உள்ளன.
ஒப்பந்தம்
1993 மற்றும் 1996ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிரானது இது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனா ஒப்பந்தங்களின் அடிப்படையில் படைகளை குவிக்க வேண்டும். குறைந்த அளவில் மட்டுமே சீனா படைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் சீனா அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது. பேச்சுவார்த்தைகளை சீனா மதித்து நடக்க வேண்டும் என்று, இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.