11 பேர்.. கேரளாவில் இருந்து மட்டும் 7 பேர்.. இந்தியாவிற்கும் பரவி விட்டதா கோரோனா வைரஸ்.. உண்மை என்ன?
இந்தியாவில் மட்டும் கேரளாவை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் கோரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லி: இந்தியாவில் மட்டும் கேரளாவை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் கோரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க தற்போது சீனாவின் கோரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 46 பேர் பலியாகி உள்ளனர். 1100 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாளுக்கு நாள் இதனால் மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.
"ஆல் இஸ் வெல்", வெறும் தலைவலிதான் என்று டிரம்ப் சொன்னாரே.. 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயமாமே
இந்தியா அறிகுறி
இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் 11 பேர் கோரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 7 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். ஒருவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். ஒருவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவை சேர்ந்தவர்
இவர்கள் எல்லோரும் சீனாவில் இருந்து இந்தியா வந்தவர்கள். எல்லா வாரமும் மாதமும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு 20000 பேர் வருகிறார்கள். இவர்கள் அங்கு ஐடி பணிகள், மருத்துவ வேலைகளுக்காக செல்ல கூடியவர்கள். இவர்களில்தான் தற்போது 7 பேருக்கு கோரோனா தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவர்களை தற்போது தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு
இதனால் இந்தியா முழுக்க விமான நிலையங்களில் அதிகமாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் மக்கள் எல்லோரும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான நோய் தாக்குதலும் இல்லை என்று உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளாவில் மட்டும் மொத்தம் 80 பேர் இப்படி சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் இல்லை
இந்த 80 பேரில் 73 பேருக்கு நோய் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் தற்போது வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கும் கோரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. இவர்கள் சோதனை மட்டும் செய்யப்பட்டு வருகிறார்கள்.
மக்கள் தொகை அதிகம்
இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் அதிகம். இந்தியாவில் பல இடங்கள் அதிக சத்தமின்றி காணப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. சீனாவிற்கு இந்தியா அருகில் உள்ளது. கோரோனா வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.