நீர்மூழ்கி கப்பல் பலத்தில் இந்தியாவை முந்தி எங்கோ சென்றுவிட்டது சீனா
டெல்லி: நீர்மூழ்கி கப்பல் பலத்தில் சீனாவைவிட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது. நவீன வகை கப்பல்களை வாங்குவதில் இந்தியா தற்போதுதான் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு சீனாவின் போர் நீர்மூழ்கி கப்பல் சமீபத்தில் வந்து சென்றது. சாட்டிலைட் படங்கள் மூலம்தான் இத்தகவல் வெளியுலகத்திற்கு வந்தது.
அதி நவீன கப்பல்கள்
சீனாவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு வாரம்வரை நீரை விட்டு வெளியே வராமல் நீருக்குள்ளேயே பயணம் செய்ய வல்லவை. எரிபொருளும் வாரத்திற்கு ஒருமுறை நிரப்பப்பட்டால் போதும்.
இந்தியாவுக்கு பின்னடைவு
ஆனால், இஸ்ரேலிடம் இந்தியா வாங்கியுள்ள நீர்மூழ்கி கப்பல்கள் அப்படிப்பட்டவை அல்ல. மேலும் பாகிஸ்தானுக்கும், சீனா நீர்மூழ்கி கப்பல்களை சப்ளை செய்துவருவது இந்தியாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
எண்ணிக்கை அதிகம்
இந்தியாவிடம் 14 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்று, அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் சக்தி கொண்டது. ரஷ்யாவிடமிருந்து 2012ம் ஆண்டில் 10 ஆண்டு குத்தகைக்கு இந்த கப்பல் வாங்கப்பட்டது. அதேநேரம் சீனாவிடம் 68 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 5 கப்பல்கள் உள்ளன.
பழைய கப்பல்கள்
இந்தியாவிடமுள்ள பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் 20 வருடங்களுக்கும் மேல் பழமையானவை. தற்போது, அதன் சேவை காலத்தை முடிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவிடம் 14 நீர்மூழ்கி கப்பல்கள் தவிர, 127 கப்பல்களும் உள்ளன. ஆக மொத்தம், 141 கப்பல்கள் இந்தியாவசம் உள்ளன. அதேநேரம், சீனாவிடம், உள்ள நீர்மூழ்கி மற்றும் நீர்மேல் செல்லும் கப்பல்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டுகிறது.
விழித்துக்கொண்ட இந்தியா
சீனாவிடமுள்ள நீர்மூழ்கி கப்பல்களில் 5 கப்பல்கள், அணு ஆயுதந்தாங்கி கப்பல்களாகும். மேலும் நான்கு நீர்மூழ்கி கப்பல் வகையை சேர்ந்தவை. இந்நிலையில்தான், சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக, கடந்த 14ம் தேதி, இந்தியா ஒரு மூவ் எடுத்துள்ளது. அதாவது, அமெரிக்கா தயாரித்த பி-81 வகை நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு பச்சைக்கொடி காண்பித்தது.