லடாக்: இந்திய போர் விமானங்களைக் கண்காணிக்கும் சீனாவின் ரேடார் கருவிகள்
லடாக்: இந்தியப் போர் விமானங்களைக் கண்காணிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய தெளலத் பேக் ஓல்டி பகுதியில் சீனா ஒரு ரேடார் கண்காணிப்பு நிலையத்தை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தெளலத் பேக் ஓல்டி என்ற இடத்தில், இந்தியாவிற்குச் சொந்தமான விமானப்படை தளம் உள்ளது. கடந்த 1962ம் ஆண்டு, இந்திய-சீனப் போரின் போது இந்தியா இந்த விமான தளத்தைப் பயன்படுத்தியது. பின்னர் அந்த விமானத் தளம் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது.
சமீபகாலமாக லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலைத் தொடர்ந்து மீண்டும் லடாக் விமான தளத்தை இந்தியா மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அதிநவீன சி-130ஜெ. சூப்பர் ஹெர்குலஸ் ஜம்போ விமானத்தை, அங்கு தரையிறக்கி விமானப்படை பயிற்சி மேற்கொண்டு வருகிறது இந்தியா.
இந்நிலையில், இப்பகுதியில் இந்திய விமானப்படை விமானங்களை கண்காணிக்க, சீனா அப்பகுதியில் ரேடார் கருவிகளை நிறுவியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.