438 இடங்களில் இறங்கிய படை.. லடாக்கிற்கு இடையே சத்தமின்றி உத்தரகாண்டில் வியூகம் வகுத்த இந்தியா.. செம!
லடாக்: சீனாவிற்கு எதிராக லடாக்கில் மட்டுமல்ல உத்தரகாண்டிலும் இந்தியா தீவிரமான ராணுவ பணிகளை செய்து வருகிறது. அங்கு விமானங்கள் ஏற்கனவே நிலம் வாங்க போவதாக செய்திகள் வந்த நிலையில், இந்திய ராணுவம் உத்தரகாண்டில் வகுத்து இருக்கும் திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்குறியே சிவாஜி.. என்று சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். தற்போது அந்த வசனத்தை அப்படியே எல்லையில் இந்தியா நிஜமாக்கி வருகிறது. ஆம் எல்லையில் சீனாவிற்கு எங்கு எல்லாம் செக் வைக்க முடியுமோ அங்கு எல்லாம் இந்தியா செக் வைத்து வருகிறது.
ஒரு பக்கம் ராஜாங்க ரீதியான நெருக்கடி, இன்னொரு பக்கம் லடாக்கில் மலைகளை பிடித்துவிட்டு அதன் மூலம் ராணுவ ரீதியான நெருக்கடி என்று தொடர் நெருக்கடிகளை சீனாவிற்கு இந்தியா அளித்து வருகிறது. இந்த நிலையில்தான் உத்தரகாண்டில் சீனாவிற்கு தற்போது இந்திய ராணுவம் ஷாக் கொடுக்க தயாராகி வருகிறது.
சீனாவின் அடுத்த குறி.. அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்த பிஎல்ஏ.. இந்தியா ஹைஅலார்ட்!
உத்தரகாண்ட் ஏன்
இந்தியா இப்படி திடீரென உத்தரகாண்ட் மீது கவனம் செலுத்த காரணம் இருக்கிறது. மொத்தம் உத்தரகாண்ட் தனது எல்லையில் 350 கிமீ எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இன்னொரு பக்கம் நேபாளம் உடன் 275 கிமீ எல்லையை உத்தரகாண்ட் பகிர்ந்து கொள்கிறது. உத்தரகாண்டில் இருக்கும் 3 மாவட்டங்கள் சீனாவின் எல்லையில் உள்ளது. 2 மாவட்டங்கள் நேபாளத்தின் எல்லையில் உள்ளது.
முக்கிய மாவட்டம்
அதிலும் முக்கியமாக பித்தோகார்க் என்ற மாவட்டம் சீனா மற்றும் நேபாளத்தின் எல்லையில் உள்ளது. இதனால் உத்தரகாண்ட் தற்போது இந்திய - சீன பிரச்சனையில் மிக முக்கியமான மாநிலமாக மாறியுள்ளது. இதனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலம் வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்தது. எல்லையில் விமானப்படை தளம் அமைக்கும் வகையிலும், ரேடார்களை பொருத்தும் வகையிலும் இந்திய விமானப்படை அங்கு நிலம் வாங்க முடிவு செய்தது.
எங்கு நிலம்
இதற்காக சமோலி, பித்தோகார்க், உத்தரகாசி ஆகிய இடங்களை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது. இந்திய விமானப்படை அங்கு ஓடுதளம், ஏவுகணை தளம், ரேடார் அமைப்புகளை ஏற்படுத்த உள்ளது. அதேபோல் இதற்கு முன் இருக்கும் விமான நிலையங்களை விரிவாக்கி ராணுவத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ராணுவம்
ஆனால் எல்லையில் விமானப்படை மட்டும் இப்படி ஏற்பாடுகள் செய்யவில்லை. இந்திய ராணுவமும் இதற்காக எல்லையில் தற்போது தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. உத்தரகாண்ட் எல்லையில் கூடுதல் படைகளை இந்தியா குவித்து வருகிறது. எல்லை பாதுகாப்பு படையும், அதன் சிறப்பு பீரங்கி குழுவும் எல்லையில் ஏற்கனவே உத்தரகாண்ட் குவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் சின்னுக் ரக ஹெலிகாப்டர்களை அங்கே இறக்கி உள்ளனர்.
ஹெலிகாப்டர் இறங்கியது
சின்னுக் ரக ஹெலிகாப்டர்கள் அதிக வீரர்களை, ஆயுதங்களை இறக்க உதவும். தற்போது உத்தரகாண்டில் முதல் முறையாக எல்லையை காக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் இந்த ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் களமிறக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக அங்கே கூடுதல் ஹெலிபேட்களும் அமைக்கப்பட்டு வருகிறது. எல்லையில் வீரர்களுக்கு துல்லியமான தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த கேபிள்கள் போடப்பட்டு வருகிறது.
டவர்கள் அமைப்பு
சில முக்கியமான எல்லை ஓர கிராமங்களில் தற்போது மின்சார டவர்களும், சோலார் பேனல்களும் அமைக்கப்பட்டு வருகிறது. 438 கிராமங்களில் இதற்காக நவீன டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் சீனாவில் இருந்து 30 கிமீ தூரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள இடங்கள் ஆகும். இங்கு இருக்கும் மக்கள் சிலர் நேபாள நாட்டின் சிம் கார்ட் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு இந்திய சிம் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது.
உளவாளிகள்
அதேபோல் இந்தியா சார்பாக எல்லை அருகே இருக்கும் கிராமங்களில் உளவாளிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். கிராம எல்லையில் நிலவரங்களை தெரிந்து கொள்வதற்காக உளவாளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதோடு ராணுவ வாகனங்களை கொண்டு செல்வதற்காக உத்தரகாண்ட் எல்லையில் தற்போது சாலைகள் அமைக்கும் பணிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதனால் லடாக்கில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த எல்லையிலும் சீன ராணுவம் அத்துமீற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.