கல்வான் சண்டையில் கூட துப்பாக்கியை தூக்கவில்லை.. 50 வருடத்திற்கு பின் இப்படி ஒரு சம்பவம்.. ஷாக்கிங்!
லடாக்: லடாக்கில் 50 வருடங்களுக்கு பின் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா தெரிவித்துள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. லடாக்கில் இந்தியா அத்துமீறி, எல்லை தாண்ட நினைத்தது என்று சீனா கூறியுள்ளது.
லடாக்கில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. ஆனால் இது தொடர்பாக இந்தியா இன்னும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
லடாக், டோக்லாம் வரிசையில் அடுத்து அருணாசலப் பிரதேசம்? 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்
என்ன நடந்தது
லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் ஷென்போ மலைப்பகுதியை இந்தியா அத்துமீறி கடந்தது. பாங்காங் திசோவின் தெற்கு பகுதிக்குள் இந்தியா அத்துமீறி நுழைந்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியாவின் படைகள் திடீர் என்று ஊடுருவியது என்று சீனா கூறியுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தியது
மேலும், எல்லை மீறிய இந்திய படை அங்கு துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு தகுந்த பதில் நடவடிக்கைகளை சீன படைகள் எடுத்துள்ளது. இந்தியா எல்லையில் தேவையில்லாமல் அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது என்று சீனா கூறியுள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை. துப்பாக்கி சூடு குறித்து இன்னும் இந்தியா அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
என்ன பதற்றம்
இந்த துப்பாக்கி சூடு காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பொதுவாக லடாக் எல்லை மட்டுமின்றி சீனாவுடன் எல்லையில் எங்கு பிரச்சனை வந்தாலும் அங்கு துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது என்று விதி உள்ளது. இந்தியா - சீனா இடையிலான 1962ல் நடந்த போருக்கு பின் 1975ல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு நாட்டு வீரர்களும் அதன்பின் எல்லையில் துப்பாக்கி மூலம் தாக்கியதே இல்லை.
ஏன் காரணம்
எந்த பிரச்னை வந்தாலும் பேசி தீர்க்க வேண்டும். துப்பாக்கி, குண்டுகள், கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்த கூடாது என்று விதி உள்ளது. இதனால் எப்போது சண்டை நடந்தாலும் துப்பாக்கி இல்லாமல் மட்டுமே நடக்கும். இதனால்தான் கடந்த முறை கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 20 இந்திய வீரர்கள் இதில் வீரமரணம் அடைந்த போது கூட இந்திய ராணுவம் இதில் துப்பாக்கியை தூக்கவில்லை.
உறுதி செய்யப்பட்டது
அதன்பின் 1996 மற்றும் 2005ல் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. அதன்படி எல்லையில் எங்கும் துப்பாக்கி சூட்டை நடத்த கூடாது என்று இரண்டு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. ஆனால் அந்த ஒப்பந்தம் தற்போது எல்லையில் மீறப்பட்டுள்ளது அச்சத்தை எழுப்பி உள்ளது. இவ்வளவு நாள் எல்லையில் எப்போது சண்டை வந்தாலும் பொதுவாக இந்தியா - சீனா இடையே எல்லையில் சண்டை வந்தால் துப்பாக்கி குண்டுகள் வைத்து எல்லாம் தாக்குதல் நடக்காது. குச்சி - கற்களை வைத்து மட்டுமே சண்டை நடக்கும்.
பதற்றம்
ஆனால் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இன்னும் இந்த துப்பாக்கி சூட்டை இந்திய ராணுவம் உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த செய்தி எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போருக்கான அறிகுறி. பேச்சுவார்த்தை மூலம் நிலைமை சரியாகும் என்று இனியும் நம்ப முடியாது என்று பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.