மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்!
லடாக்: லடாக் மோதலில் சீனா பின்வாங்கியது ஆசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. கல்வான் பகுதியில் இருந்து மொத்தம் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இன்னும் மற்ற இடங்களில் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை.
Recommended Video
இன்னும் வரும் நாட்களில் சீனா மற்ற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் வாங்க உள்ளது. இதற்கான தீவிரமான கண்காணிப்பு பணிகளை அங்கே இந்திய ராணுவம் செய்து வருகிறது.
வாபஸ் புகைப்படம்
எல்லையில் சீனா படைகளை வாபஸ் வாங்குவதற்கான புகைப்படங்கள், ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அங்கு இருக்கும் டென்ட்களை, வாகனங்களை நீக்கி உள்ளது. இன்னும் சில கனரக வாகனங்களை மட்டும் சீனா அங்கு குவித்து இருக்கிறது. அங்கிருந்து இந்த வாகனங்களையும் சீனா வரும் நாட்களில் வாபஸ் வாங்கும் என்று கூறுகிறார்கள்.
கடும் எதிர்ப்பு
சீனாவின் இந்த பின்வாங்கல் அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு எதிராகவே தற்போது திரும்பி உள்ளது. ஜிங்பிங்கின் ஆக்கிமிரப்பு திட்டமும், அது இந்தியாவிடம் தோல்வி அடைந்ததும் உலகம் முழுக்க விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக சீனாவில் இருக்கும் மக்களே ஜிங்பிங்கிற்கு எதிராக கொதித்து போய் உள்ளனர். அதேபோல் சீனாவின் ராணுவ வீரர்களும் ஜிங்பிங்கிற்கு எதிராக கொதித்து போய் உள்ளனர்.
சீனாவின் தோல்வி
முக்கியமாக ஆசியாவில் பெரிய தலைகட்டாக மாற முயன்று அதில் சீனா மோசமாக தோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக ஆசியாவில் இருக்கும் இந்தியாவை வீழ்த்திவிட்டு முன்னுக்கு வர நினைத்த அவரின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. கொரோனாவிற்கு பின் லடாக்கில் சீனா பின்வாங்கியது அந்த நாட்டிற்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது.
ராஜாங்க வெற்றி
இந்த சண்டையை பெரிய அளவில் பூதாகரமாக்காமலே இந்தியா மிக எளிதாக வென்று இருக்கிறது. பிரதமர் மோடி மிக ராஜாங்க ரீதியாக செயல்பட்டு சீனாவை வீழ்த்தி இருக்கிறார். ஆசிய அளவில் அதிபர் ஜிங்பிங்கை விட பிரதமர் மோடிதான் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து என்று முக்கியமான வல்லரசு நாட்டு தலைவர்கள் உடன் பிரதமர் மோடி மிகவும் நெருக்கமாக இருந்து, இந்த காரியத்தை சாதித்து இருக்கிறார்.
சீனா இழந்தது என்ன
இந்தியாவிற்கு எதிராக லடாக்கில் சீனா பின்வாங்கிய நிலையில் சீனா பின் வரும் விஷயங்களை இழந்து இருக்கிறது. 1979க்கு பின் எல்லையில் நடக்கும் ஒரு சண்டையில் சீனாவின் தரப்பு தனது வீரர்களை இழந்து உள்ளது. சீனாவின் தரப்பில் 40-100 வீரர்கள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சீனாவின் உண்மையான ராணுவ பலம், வீரர்களின் திறமை என்ன என்பது உறுதியாகி உள்ளது.
பெரிய பங்கு சந்தை
இனி சீன பொருட்களே வாங்க கூடாது என்ற நிலைக்கு இந்தியா வந்துள்ளது. சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவும் சீனாவின் ஆப்களை தடை செய்ய உறுதியாக உள்ளது. இன்னும் சில நாடுகள் இதேபோல் சீனாவை தாக்க தயாராக இருக்கிறது. இந்தியாவின் இந்த ராஜதந்திரத்தை சீனா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் உலக அளவில் சீனா தனது சந்தையை இழக்கும் நிலையை அடைந்துள்ளது.
உலக நாடுகள்
சீனா மீது இந்தியா வைத்து இருந்த நம்பிக்கை மொத்தமாக தகர்ந்து இருக்கிறது. அதேபோல் சீனா மீது உலக நாடுகள் வைத்து இருந்த நம்பிக்கையும் மொத்தமாக தகர்ந்து உள்ளது. அதேபோல் ராஜாங்க ரீதியாக உலக நாடுகள் உடன் சீனாவிற்கு பெரிய அளவில் நட்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. சீனாவிற்கு ஆதரவு அளிக்க பெரிய அளவில் எந்த உலக நாடும் தயாராக இல்லை என்பது இதன் மூலம் உலக அளவில் உறுதியாகி உள்ளது.
இரண்டு நாடுகள் சண்டை
ஆசியாவில் இந்தியா - சீனா ஆகிய வல்லரசுகள் இடையிலான சண்டை அனைத்து உலக நாடுகள் மூலமும் உற்றுநோக்கப்பட்டது. இதில் இந்தியா சீனா இடையிலான கிட்டத்தட்ட மோடி - ஜிங்பிங் இடையிலான மோதலாக பார்க்கப்பட்டது. ஆசியாவில் யார் கிங் என்பதை நிரூபிப்பதற்கான போட்டியாகவே இது பார்க்கப்பட்டது. தற்போது அதில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார், ஏறத்தாழ வெற்றியும் பெற்றுவிட்டார் என்று கூறுகிறார்கள்.