இன்னும் முடியவில்லை.. சீனா தனது படைகளை முழுதாக வாபஸ் வாங்கவில்லை.. இந்தியா அறிவிப்பு.. பின்னணி
லடாக்: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிவிட்டதாக சீனா கூறியுள்ள நிலையில், இன்னும் முழுதாக சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் இன்னும் மோதல் நிலவி வருகிறது. அங்கு கடந்த மே 5ம் தேதி முதல் முறையாக சீனா அத்துமீறியது. அதன்பின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனால் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூலை 5ம் தேதி இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை வாபஸ் வாங்கி கொள்வதாக அறிவித்தது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் நடத்திய ஆலோசனைக்கு பின் எல்லையில் படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது.
உறவு முக்கியம்.. இந்தியா இல்லாமல் இருக்க முடியாது.. வர்த்தக மோதலால் கதிகலங்கிய சீனா.. திடீர் அறிக்கை
என்ன சொன்னது
இது தொடர்பாக தற்போது சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், எல்லையில் இரண்டு நாட்டு படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் நாங்கள் படைகளை வாபஸ் வாங்கிவிட்டோம். சீனா மூலம் இந்தியாவிற்கு எந்த விதமான ஆபத்தும் கிடையாது. சீனா மூலம் இந்தியாவிற்கு பிரச்சனை இல்லை.
ஆபத்து இல்லை
எல்லையில் நிலைமை சரியாகி வருகிறது. அங்கு நிலவிய பதற்றம் தணிந்து வருகிறது. எல்லையில் நிலையை சரி செய்ய போதுமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவுடன் உறவை பலப்படுத்த விரும்புகிறோம். எல்லையில் அமைதி நிலவ தேவையான முன்னெடுப்புகளை சீனா கண்டிப்பாக எடுக்கும் என்று, சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் என்ன
இது தொடர்பாக இந்தியா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், எல்லையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் படைகள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக இன்னும் படைகள் வாபஸ் வாங்கப்படவில்லை.சீனா எங்களுடன் இணக்கத்துடன் செயல்பட்டு கண்டிப்பாக படைகளை வாபஸ் வாங்கும் என்று நம்புகிறோம், என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது .
என்ன நடக்கிறது
உண்மையில் லடாக்கில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் சீனா தொடர்ந்து சில ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து பின்வாங்காமல் இருக்கிறது. அங்கு டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கிவிட்டது.ஆனால் இன்னும் பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் கோக்ரா பகுதியில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை.