முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்!
லடாக்: இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முக்கியமான இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டைக்கு பின் உறவு மோசமாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து எல்லையில் சீன ராணுவம் படைகளை குவித்து வருகிறது.அங்கு அமைதி திரும்புவதற்கான எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை.
இதுவரை 20க்கும் அதிகமான முறை இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.ஆனால் எந்த பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு எட்டப்படவில்லை.
இதுதான் சரியான திட்டம்.. சீனாவை முடக்கும் இந்தியாவின் "கிளீன் ஆப்" முடிவு.. அமெரிக்கா அதிரடி ஆதரவு!
என்ன தீர்வு
இந்த நிலையில் இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முக்கியமான இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். நேற்று மாலையில் இருந்து இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
நீண்ட நேரம்
இந்த பேச்சுவார்த்தை 18 மணி நேரத்தை தாண்டி சென்றது. இந்த நிலையில் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கல்வானில் பிரச்சனையாக இருக்கும் மூன்று கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டது என்கிறார்கள்.
எந்த இடம்
அதன்படி கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளை 14, 15, 17 ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு தரப்பும் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பகுதிகள் கல்வானில் இருந்து ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகள் வர நீண்டு உள்ளது. இந்த பகுதிகள் இந்தியாவிற்கு கீழ் வரும் இடங்கள் ஆகும். இதில் கட்டுப்பாட்டு பகுதி 14ல் தான் கடந்த மாதம் பெரிய சண்டை வந்து 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வேறு எங்கு
இதில் கட்டுப்பாட்டு பகுதி 16ல் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அந்த பகுதி முழுக்க முழுக்க இந்தியாவிற்கு கீழ் வரும் இடம் ஆகும். ஆனால் அதே சமயம் பாங்காங் திசோ பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். அங்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 4 பகுதிகளில் 2 பகுதிகளை (பிங்கர்கள் 3 மற்றும் 4) ஆகிய பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுகிறது.
சீனா உரிமை
அந்த பகுதிகளில் இருந்து சீனா வெளியேற மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டாலும் முழுமையாக இதனால் அமைதி திரும்பாது என்று கூறுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்து இருப்பதாகவும், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இந்தியா இது தொடர்பாக இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.