நடு இரவில் சண்டை.. கற்களை வைத்து தாக்கிய சீன வீரர்கள்.. 3 இந்திய வீரர்கள் மரணம்.. என்ன நடந்தது?
லடாக்: இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த ஒரு மாதமாக சீன ராணுவம் அத்துமீறி வருகிறது. கடந்த மே 5ம் தேதியில் இருந்து இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் நேற்று இரவு எல்லையில் நடந்த பெரிய சண்டையில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவர் இந்திய ராணுவ உயர் அதிகாரி என்று கூறப்படுகிறது.
ராணுவ தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
எங்கு நடந்தது
இந்த எல்லை பிரச்சனை என்பது இரண்டு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. லடாக் எல்லையில் இருக்கும் பாங்காங் திசோ பகுதி. இங்கு மொத்தம் 8 கட்டப்பாட்டு பகுதிகள் இருக்கிறது. இதில் மொத்தம் 4 கட்டுப்பாட்டு பகுதிகள் இந்தியாவிலும், 4 கட்டுப்பாட்டு பகுதிகள் சீனாவாலும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எட்டு இடங்களையும் யார் கட்டுப்படுத்துவது என்பது அங்கு சண்டையாக இருக்கிறது.
வேறு இடம்
இன்னொரு பக்கம் கல்வான் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சீனா கல்வான் பகுதியை மொத்தமாக உரிமை கோரியது. அதாவது கல்வான் பகுதி எங்களுக்கு மொத்தமாக வேண்டும். நாங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சீனா உரிமை கோரியது. ஆனால் இதற்கு இந்தியா அனுமதி அளிக்கவில்லை.
பின் வாங்கியது
இந்த நிலையில்தான் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம், இந்திய ராணுவம் இரண்டும் பின்வாங்கியது. சுமார் 2 கிமீ தூரத்திற்கு இரண்டு படைகளும் பின் வாங்கியது. ஆனால் மொத்தமாக அனைத்து புள்ளிகளிலிருந்தும் பின்வாங்காமல் சில கட்டுப்பாட்டு பகுதிகளை மட்டும் சீன ராணுவம் விட்டுக் கொடுத்தது. மற்ற இடங்களில் எப்போதும் போல பதற்றம் நீடித்து வந்தது.
நேற்று என்ன
இந்த நிலையில் நேற்று கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு படைகளும் சில இடங்களில் படைகளை வாபஸ் வாங்கியது. அப்போது நடந்த வாய் சண்டை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இது சண்டையாக மாறி உள்ளது. பொதுவாக எல்லையில் சீனா - இந்தியா இடையே துப்பாக்கி சண்டை நடக்காது. அதேபோல் நேற்று துப்பாக்கி சண்டைக்கு பதில் மாறி மாறி கற்களையும், குச்சிகளையும் வைத்து தாக்கி இருக்கிறார்கள்.
எப்போது
சரியாக நடு இரவில் இந்த சண்டை நடந்துள்ளது. சீன வீரர்கள் மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பியும் மாறி மாறி கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில்தான் இந்தியாவின் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதுதான் தற்போது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீன மரணம்
இதில் சீனா பக்கமும் பலி ஏற்பட்டு இருக்கிறது என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால் சீனா இது தொடர்பாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சீன தரப்பில் பலி ஏற்பட்டு இருப்பதாக எதுவும் அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து தகவல் வெளியாகவில்லை. இதனால் எல்லையில் உண்மையில் என்ன நடக்கிறது, நிலைமை எப்படி இருக்கிறது கேள்வி எழுந்துள்ளது.