1962ல் இருந்த இந்தியா 2017லும் இருப்பதாக சீனா நினைத்துவிட வேண்டாம்... அருண் ஜெட்லி வார்னிங்
1962ஆம் ஆண்டை போல, 2017ஆம் ஆண்டிலும் இந்தியா இருப்பதாக சீனா கருதிவிடக் கூடாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி: கடந்த 1962ல் இந்தியா இருந்த மாதிரியே இப்போதும் இருக்கிறது என்று சீனா நினைத்துக் கொள்ள கூடாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிக்கிம், சீனாவின் சுயாட்சிப் பகுதியான திபெத், பூடான் நாட்டின் டோக்லம் பீடபூமி சந்திக்கும் புள்ளியில், எல்லை வரையறை செய்யப்படாத பகுதியில் சீன ராணுவம் தற்போது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
பூடானின் டோக்லம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டோக்லம் பீடபூமியை சீனா ஆக்கிரமிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இந்தியா இந்த முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எல்லை தாண்டிய சீனா
இந்நிலையில், அண்மையில் சிக்கிம் எல்லையில் டோகா லா என்ற பகுதிக்குள் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்துள்ளனர். இந்தியா தரப்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவர்கள் தொடர்ந்து முன்னேறியதால் லேசான கைகலப்பு ஏற்பட்டு, அதன் பின்னர் சீன ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துமீறலை கைவிடாத சீனா
கடந்த 20ம் தேதி இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு கூட்டத்தில் எல்லையில் அத்துமீறல் குறித்து பேசப்பட்டது. இருப்பினும் அத்துமீறல் போக்கை சீனா கைவிடவில்லை.
இந்தியா பாடம் கற்கவேண்டும்
மேலும் இந்தியாதான் எல்லையில் அத்துமீறுவதாகவும், 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரை நினைத்துப் பார்த்து, இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீனா கூறியிருந்தது. பூடான் எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா கூறியிருந்தது.
பதிலடி கொடுத்த இந்தியா
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி 1962ஆம் ஆண்டில் இருந்த நிலை வேறு . 2017-ல் இருக்கும் இந்தியா, 1962ஆம் ஆண்டில் இருந்த இந்தியாவை விட முற்றிலும் வேறுபட்டது என்று கூறியுள்ளார்.
பூடானை ஆக்கிரமிக்கும் சீனா
பூடான் நாட்டின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டிய அருண் ஜெட்லி, பூடான் அரசு வெளியிட்ட அறிக்கை அதை தெளிவுபடுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா-பூடான் இடையேயான ஏற்பாட்டின் அடிப்படையில், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதாகவும் அருண் ஜெட்லி விரிவாகத் தெரிவித்துள்ளார்.
குவிக்கப்படும் வீரர்கள்
இதனிடையே, சீனாவின் அத்துமீறலை அடுத்து, ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், சிக்கிம் தலைநகர் காங்டோக்கில் படைப்பிரிவின் தலைமையகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த பின்னணியில், சிக்கிம், திபெத், டோக்லம் பீடபூமி சந்திக்கும் பகுதியில் 3 ஆயிரம் இந்திய வீரர்களை ராணுவம் குவித்துள்ளது. இதேபோல சீன தரப்பிலும் 3 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.