போர் பீதி கிடக்கட்டும்.. செல்போன் விற்பனையில் இந்தியாவில் 2வது இடத்தை பிடித்துவிட்ட சீன நிறுவனம்
டெல்லி: சிக்கிம் எல்லையில், இந்தியா-சீனா நடுவே கடும் பதற்றம் நிலவி வரும் நிலையிலும், சீனாவை சேர்ந்த ஒரு செல்போன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
சீனாவை சேர்ந்த லீ ஜுன் உருவாக்கிய ஜியோமி (எம்.ஐ) போன்கள்தான் இந்தியாவில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. பல்வேறு வசதி, நீடித்து நிற்கும் சார்ஜ் போன்ற வசதிகளுடைய போன்களை பிற போட்டியாளர்களைவிட குறைந்த விலையில் தருவதால் எம்.ஐ போன்களுக்கு இந்தியாவில் கிராக்கி அதிகம்.
இந்தியாவின் ஜியோமியின் வருமான அதிகரிப்பு 328 சதவீதம் அதிகரித்துள்ளது என்றால், நீங்களே அதன் சந்தை மதிப்பை கணக்கிட்டுக்கொள்ளலாம். நடப்பாண்டின் 2வது காலாண்டில், சாதனை அளவாக ஜியோமி இந்தியாவுக்கு போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இக்காலகட்டத்தில் 2 கோடியே 30 லட்சம் அளவுக்கு போன்களை ஜியோமி ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்குள் அனுப்பி வைத்துள்ளது.
ரெட்மி நோட் 3, நோட்4 போன்றவை அதிகம் விற்பனையாகும் ஜியோமி போன்களாகும். இந்திய மார்க்கெட்டில் ஜியோமிக்கு இப்போது 2வது இடம். விரைவிலேயே முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு அதற்கு உள்ளது.