சீனாவின் அடுத்த குறி.. அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்த பிஎல்ஏ.. இந்தியா ஹைஅலர்ட்!
குவஹாத்தி: லடாக்கில் உள்ள ரெசாங் லா ரெச்சென் லா மலைகளில் பின்னடைவை சந்தித்த சீன இராணுவம் இப்போது அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் குறைந்தது நான்கு இடங்களில் தனது துருப்புக்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே மற்றும் ஃபிஷ்டைல் 2 ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில், சீனப் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று மத்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசின் வட்டாரங்கள் மேலும் கூறுகையில், அருணாச்சல பிரதேசத்தின் மேற்கண்ட பகுதிகளில் அதிக ஊடுருவல்களைச் செய்ய சீனா முயற்சிக்கக்கூடும் என்றும், படைகள் இல்லாத இடங்களையே அல்லது மலை உச்சிகளையே கைப்பற்ற முயற்சிக்கக்கூடும். எனவே இதுபோன்ற முயற்சிகளைத் தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் முழுமையாகத் தயாராக உள்ளனர் அதற்கேற்ப படைகள் தங்கள் பலத்தை அதிகரித்து கொண்டுள்ளன.
எதைப் பற்றியும் சட்டை செய்யாத சீனா.. லடாக் எல்லையில் ஃபைபர் கேபிள் அமைக்கிறது.. வெளியான திடுக் தகவல்
இந்தியா உஷார்
சீன ராணுவ வீரர்கள் தங்கள் பகுதிகளில் (எல்.ஐ.சியில் இருந்து சுமார் 20 கி.மீ) கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உருவாக்கப்பட்ட சாலைகளைப் பயன்படுத்தி வருவதை காணமுடிகிறது. இப்பகுதியில் சீன நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இந்தியத் தரப்பு அனைத்து துறைகளிலும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தனது நிலைகளை வலுப்படுத்தியுள்ளது.
இந்திய எல்லை அருகே
சீன இராணுவத்தினர் இடைவிடாது ரோந்துகள் செல்கிறார்கள். அவர்கள் இந்திய பகுதிகளுக்கு மிக அருகில் வந்துள்ளனர். அண்மை காலங்களில் சீன இராணுவம் கணிசமாக படைகளை பூட்டானில் உள்ள டோக்லாம் பகுதியில் அதிகரித்துள்ளன. எனவே அதைச் சுற்றியுள்ள நிலவரங்கள் குறித்தும் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் விவாதங்கள் நடத்தியுள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வடகிழக்கு மாநிலங்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு, டோக்லாம் பகுதியில் இந்தியாவும் சீனாவும் ஒரு பெரிய நிலைப்பாட்டில் ஈடுபட்டிருந்தன, அங்கு சீனர்கள் பூட்டானிய மண்ணில் ஜம்பிரி ரிட்ஜ் வரை சாலைகள் அமைத்தனர். இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும், சிலிகுரி பகுதியில் உள்ள இந்திய நிலைகளை அச்சுறுத்தியது.
துப்பாக்கிச்சூடு
ஆகஸ்ட் மாத இறுதியில் பாங்கோங் ஏரியின் தெற்கு கரைக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயன்ற நிலையில் சீனா கடும் பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவத்தின் பதிலடியால் கோபம் அடைந்த சீனா அச்சுறுத்தும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கிக்சூடு நடத்தியது. இது கடந்த 45 ஆண்டுகளில் முதல்முறையாக சீன எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடு ஆகும்.
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
இதனிடையே சீனாவின் இந்த அச்சுறுத்தலை இந்தியா திறம்பட சமாளித்தது. சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் ஃபிங்கர் 4 இல் உள்ள சீன இராணுவ நிலைகள் ஆக்கிரமித்திருந்த பகுதிகள், ஏரியின் தெற்கு கரையில் ஸ்பாங்கூர் கேப் அருகில் உள்ள மலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது" இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.