உத்தரகாண்ட்டில் சீன ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊருவல்- எல்லையில் பதற்றம்
உத்தரகாண்ட்டில் சீன ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊடுருவியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டேராடூன்: உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்துக்குள் சீனா ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊடுருவியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
பூடானின் டோக்லாமை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை தடுத்து கொண்டிருக்கிறது நமது ராணுவம். இதனால் சிக்கிம் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் நாட்டின் மற்றொரு எல்லையான உத்தரகாண்ட் பகுதியியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 19-ந் தேதியன்று சமோலி எல்லையை தாண்டி 1 கி.மீ தூரத்துக்கு பரஹோத்தி பகுதியில் ஆயுதங்களுடன் சீன ராணுவத்தினர் நடமாடியுள்ளனர். அவர்களை எல்லை படையினர் விரட்டியடித்துள்ளனர்.
மேலும் அதேநாளில் உத்தரகாண்ட் வான்பரப்பில் சீன ராணுவ ஹெலிகாப்டர் வட்டமடித்து சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 26-ந் தேதியன்றும் சீன ராணுவத்தினர் மீண்டும் எல்லை தாண்டி அத்துமீறியுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் 350 கி.மீ. சீனாவுடனான எல்லைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.