காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை ஒப்படைத்தது சீனா ராணுவம்
இடாநகர்: காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை இன்று இந்திய ராணுவத்தினரிடம் சீனா ராணுவம் ஒப்படைத்தது.
அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒருபகுதியாக உரிமை கோரி வருகிறது சீனா. ஆனால் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பதில் நமது மத்திய அரசுகள் திட்டவட்டமாக உள்ளன.
அருணாச்சல பிரதேச எல்லையில் படைகளைக் குவிப்பதும் ஊடுருவ முயற்சிப்பதும் சீனாவின் தொடர் வாடிக்கை. மேலும் அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களையும் சூட்டியுள்ளது.
அத்துடன் மத்திய அமைச்சர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சென்றாலே எதிர்ப்பு தெரிவிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறது சீனா. இந்த நிலையில் அண்மையில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த இளைஞரை சீனா ராணுவம்தான் கடத்தி இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
Recommended Video
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் குறித்த விவரங்களை சீனா ராணுவத்துக்கு நமது ராணுவம் பகிர்ந்தது. தொடக்கத்தில் அந்த இளைஞர் தங்கள் பகுதியில் இல்லவே இல்லை என கைவிரித்தது சீனா. இப்போது தங்கள் பகுதியில் அந்த இளைஞர் இருப்பதை உறுதி செய்தது. அத்துடன் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய அமைச்சர் கிரென் ரிஜுஜூ உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.