பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் சீன வெளியுறவு அமைச்சர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி வருகை தரும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நாளை சந்தித்து பேச இருக்கிறார்.
புதிய பிரதமர் மோடியுடன் நட்பு வைக்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மோடியை தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் சீனா தனது வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமையில் 7 பேர் கொண்ட தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறது. சீனா குழுவினர் நாளை டெல்லி வருகை தருகின்றனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது இந்தியா - சீனா உறவுகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
மேலும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சீனா அமைச்சர் சந்தித்துப் பேசுகிறார். நாளை மறுநாள் லோக்சபா கூடுவதால் நாளையே சீன அதிகாரிகள் குழு தனது பேச்சு வார்த்தையை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.