இந்தியா,தென்கிழக்கு ஆசியா நாடுகளை குறி வைத்து இயங்கும் சீனா 'ஹேக்கர்ஸ்'
டெல்லி: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசு சார்ந்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளாக சீனா உளவு பார்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பையர் ஐ என்ற இணையதள பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2005ம் ஆண்டு முதல் ஹேக்கர்கள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய தகவல்களை திருடி வருகின்றனர். அதுவும் அரசு விவரங்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்களின் மின்னஞ்சல்கள், பொருளாதாரம், ராணுவம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைதான் இவர்கள் திருடி வருகின்றனர்.,
மேலும் சீனா குறித்து எழுதும் பத்திரிகையாளர்கள், கட்டுமானம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களும் வேவு பார்க்கப்படுகின்றன. போலி என கண்டுபிடிக்க முடியாத மின்னஞ்சல்களை அனுப்பி அதன் மூலம் அரசு துறைகளின் தகவல்கள் களவாடப்படுகின்றன.
ஆனால் அரசு மற்றும் நிறுவன அதிகாரிகள் இதை அறிய முடியாத வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனராம் இந்த ஹேக்கர்கள். இதற்கான சர்வர்கள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹேக்கர்களில் பெரும்பாலானோர் சீனர்கள்தானாம்.. இவர்களுக்கு பின்னணியில் சீனா அரசுதான் இருக்கிறதாம்..
ஆனால் இக் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, மெக்கபி நிறுவனம் சீனா மீது இது போன்ற குற்றச்சாட்டை சுமத்தியது. அப்போதும் சீனா மறுப்பு தெரிவித்தது.