லடாக்கில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்?
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூரம் வரை ஊடுருவி கூடாரம் அமைத்து தங்கியதாக தகவல் வெளியானது.
அத்துடன் அப்பகுதியில் 100 இந்திய வீரர்களை 300க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் சீன ராணுவம் 334 முறை ஊடுருவியுள்ளது. இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியை, அகமதாபாத்தில் வரும் 18ந் தேதி சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் பலவற்றில் கையெழுத்திட உள்ளார்.
இந்நிலையில் சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதுடன் இந்திய வீரர்களை சுற்றி வளைத்திருப்பது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.