சர்வதேச எல்லைகோட்டை மதிக்காமல் உத்தரகாண்ட் பரஹோத்தியில் ஊடுருவலை தொடரும் சீனா!
உத்தரகாண்ட் எல்லையில் சர்வதேச எல்லை கோட்டை மதிக்காமல் உத்தரகாண்ட் பரஹோத்தியில் சீனா ஊடுருவலை தொடர்ந்து மேற்கொள்கிறது.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் பரஹோத்தியில் கடந்த ஆண்டும் இதே ஜூலை மாதம் சீன ராணுவம் ஊடுருவி நம்மை சீண்டிப் பார்த்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பரஹோத்தி எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. டோக்லா பீடபூமி பிரச்சனையில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் வகையில் தற்போது உத்தரகாண்ட் எல்லையில் உள்ளே நுழைந்து விட்டு சீனா திரும்பியுள்ளது.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து 375 கி.மீ. தொலைவில் உள்ளது பரஹோத்தி எல்லைப் பகுதி. சீனா ஆக்கிரமித்திருக்கும் திபெத் பகுதியில் இருந்து பார்த்தே 3 கிலோ மீட்டர் தொலைவில் பரஹோத்தி தெரியும்.
இந்தியா- சீனா இடையேயான மக்மோகன் எல்லைக் கோடு என்பதும் பரஹோத்தி பகுதியில்தான் உள்ளது. இந்த எல்லைக் கோட்டை சீனா மதிப்பதே இல்லை. தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி முகாம்களை அமைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது சீனா.
2007ம் ஆண்டு முதல் 2012 வரை பரஹோத்தி பகுதியில் சீனா 37 முறை ஊடுருவியது. 2014-ம் ஆண்டும் கடந்த ஆண்டும் பரஹோத்திக்குள் சீனா ஊடுருவியது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம்தான் சீனா நமது எல்லைக்குள் நுழைந்து வாலாட்டிவிட்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது.