பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துவிட்டு மோடி பிறந்த நாளன்று இந்தியா வரும் சீன அதிபர்!
டெல்லி: பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நரேந்திரமோடி பிறந்தநாள் தினத்தன்று, குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தருகிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், மாலத்தீவு, இலங்கை மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயண பட்டியலில் பாகிஸ்தான் பெயரும் முதலில் இடம் பிடித்திருந்தது. ஆனால் அங்கு நிலவும் அரசியல் கொந்தளிப்பால், பாகிஸ்தான் பயணத்தை ஜி ஜின்பிங் ரத்து செய்துவிட்டார்.
17ம்தேதி வருகை
பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததன் விளைவாக ஏற்கனவே திட்டமிட்ட செப்டம்பர் 18ம்தேதிக்கு ஒருநாள் முன்பாக அதாவது 17ம்தேதி ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்.
மோடி பிறந்த நாளில் வருகை
இந்தியாவில் ஜி ஜின்பிங் முதலில் வந்திறங்கும் இடம் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமைந்துள்ள பெருநகரமான அகமதாபாத். அன்றைய தினம்தான் பிரதமர் நரேந்திரமோடியின் 64வது பிறந்த நாள் என்பது சிறப்பு. எனவே ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து மோடி பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
பிறந்த நாள் கிஃப்ட்
இந்த சுற்றுப்பயணத்தின்போது, அகமதாபாத்-மும்பை நடுவேயான புல்லட் ரயில் திட்டம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தொழில் பூங்கா அமைத்தல் போன்ற திட்டங்களுக்கான அறிவிப்பை ஜி ஜின்பிங் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியாவை உற்பத்தி துறையில் முன்னணிக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவிலுள்ள மோடிக்கு சீன அதிபரின் அறிவிப்புகள் பிறந்தநாள் கிஃப்ட்டாக இருக்க போகிறது.
அதிருப்தி இல்லை
ஜப்பானுக்கு நரேந்திரமோடி சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்த்தார். இது சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிரு்நததாக கூறப்பட்ட நிலையில், ஜி ஜின்பிங் வருகை இந்த இறுக்கத்தை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன தலைநகர் பீஜிங்கில் சில நாட்களாக தங்கியிருந்து அந்த நாட்டின் உயர் அதிகாரிகளிடம் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
சீனா மகிழ்ச்சி
இதற்கேற்ப சீன வெளியுறவு அமைச்சர் லியு ஜியான்சோ பேட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது. "இந்தியா காண்பித்து வரும் தோழமை உணர்வு எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தஉள்ளது" என்று தெரிவித்துள்ளார்.