’டோக்லாம்’: சென்னை- பெங்களூரு- மைசூரு ”அதிவேக” ரயில்களை இயக்கும் திட்டத்தை தடம்புரள வைக்கும் சீனா
டோக்லாம் பிரச்சனையால் சென்னை- பெங்களூர்- மைசூரு மார்க்கத்தில் அதிவேகத்தில் ரயில்கள் இயக்கும் திட்டம் தாமதாகியுள்ளது.
டெல்லி: டோக்லாம் விவகாரத்தால் சென்னை- பெங்களூரு- மைசூரு மார்க்கத்தில் அதிவேக ரயில்களை இயக்கும் திட்டத்தை சீனா தாமதப்படுத்துவதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னையில் இருந்து மைசூருக்கு பெங்களூரு வழியாக அதிவேக ரயில்களை இயக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கத்தில் தற்போது 80 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதை இருமடங்காக அதாவது மணிக்கு 160கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த அறிக்கையை சீனா ரயில்வே அமைச்சகத்தின் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தது.
492 கி.மீ நீளம் கொண்ட இந்த மார்க்கத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சீனா நிறுவனம் ஆய்வு நடத்தியிருந்தது. இந்த அறிக்கை மீது விவாதம் நடத்த சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு நினைவூட்டல்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் சீனா தரப்பில் இருந்து எந்த பதிலுமே வரவில்லை. டோக்லாம் விவகாரத்தில் இந்தியா- சீனா இடையே பதற்றம் நிலவி வந்ததால் சீன தரப்பில் இருந்து பதில் ஏதும் கிடைக்காமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது புதிய ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றுள்ள பியூஷ் கோயல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.