எல்லை தாண்டி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட சீன வீரர்... மீண்டும் சீன ராணுவத்திடம் ஒப்படைப்பு
ஸ்ரீநகர்: கடந்த சில நாட்களுக்கு முன், எல்லை தாண்டி தவறுதலாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்த சீன வீரரை அந்நாட்டு ராணுவத்திடம் இந்தியா இன்று ஒப்படைத்தது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் முதலே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இந்த மோதலில் இந்தியா ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல சீனாவைச் சேர்ந்த 43 பேரும் இதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இத்தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைக் குவித்து வருகின்றன.
சீன வீரர் கைது
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி, இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகச் சனிக்கிழமை இந்திய ராணுவம் தெரிவித்தது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "வெள்ளிக்கிழமை அதிகாலை, எல்லையில் இந்தியப் பகுதியில் உள்ள லடாக் பாங்சாங் ஏரியின் தெற்கே சீன வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வீரர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிய இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து அவரை இந்திய ராணுவம் கைது செய்தது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனா கோரிக்கை
இதையடுத்து சீன ராணுவத்தின் செய்தி நிறுவனமான பி.எல்.ஏ. டெய்லி நேற்று இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வெள்ளிக்கிழமை எல்லைப் பகுதியில் பணியிலிருந்த சீன வீரர் ஒருவர் காணாமல் போனதாகத் தெரிவித்திருந்தது. அதிகாலை நேரத்தில் சூழ்ந்திருந்த இருள் மற்றும் அங்கிருக்கும் குழப்பமான புவியியல் காரணமாகச் சீன வீரர் தவறுதலாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகாவும் அதில் கூறப்பட்டிருந்தது.
ஒப்படைக்க வேண்டும்
இது குறித்து இந்தியத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி சீன வீரர் திருப்பி அளிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்றும் இந்திய கூறியதாக பி.எல்.ஏ. டெய்லி கூறியிருந்தது. மேலும், சீன வீரரை தங்களிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தச் சம்பவத்தை சுமூகமான முறையில் தீர்க்க வேண்டும் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
சீன வீரர் ஒப்படைப்பு
இந்நிலையில், இன்று காலை 10:10 மணிக்கு சுஷுல்-மோல்டோ எல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் சீன ராணுவ வீரர், அந்நாட்டு ராணுவத்திடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களில் சீன வீரர் இந்தியப் பகுதிக்குள் தவறுதலாக நுழைவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம், தவறுதலாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்த வாங் யா லாங் என்ற வீரரை கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவம் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.