லடாக்கில் அத்துமீறி நுழைந்த சீன வீரர் கைது... சுற்றி வளைத்து கைது செய்த இந்திய ராணுவம்
ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
இந்திய பாதுகாப்புப் படைக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தைக் குவித்து வருகிறது
மேலும், கடந்தாண்டு ஜூலை மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், அதேபோல சீன ராணுவத்தைச் சேர்ந்த 43 பேரும் இதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இது எல்லையில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி, இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாக இந்திய ராணுவம் தற்போது கூறியுள்ளது.
இது குறித்து இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நேற்று அதிகாலை, எல்லையில் இந்தியப் பகுதியில் உள்ள லடாக் பாங்சாங் ஏரியின் தெற்கே சீன வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வீரர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிய இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து அவரை இந்திய ராணுவம் கைது செய்தது.
எதற்காக அவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தார் என்பது குறித்து அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
கைது செய்யப்பட்ட சீன வீரரின் பெயர், அவரிடம் இருந்து என்ன மாதிரியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த தகவல்களைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
இது குறித்து சீன ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை சுமூகமான முறையில் தீர்க்க இரு தரப்பும் முயன்று வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.