இந்திய எல்லைக்குள் 25 கிலோமீட்டர் ஊடுறுவி கொடி பிடித்தபடி டேரா போட்ட சீன ராணுவம்..!
டெல்லி: சீன ராணுவத்தினர், வடக்கு லடாக் பிராந்தியத்தில் பர்ட்ஸே பகுதியில் 25 முதல் 30 கிலோமீ்ட்டர் தூரம் வரை ஊடுறுவி வந்துள்ளனர். இது இந்தியப் பகுதி திரும்பிப் போ என்ற கொடியுடன் அவர்கள் இந்தியப் பகுதியில், இந்திய ராணுவ முகாம் அருகே முகாமிட்டுள்ளனர். இதே பகுதியில்தான் கடந்த ஆண்டும் சீன ராணுவம் ஊடுறுவி வந்த கொட்டாய் போட முயற்சித்து பெரும் சர்ச்சையானது என்பது நினைவிருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை இந்த ஊடுறுவல் நடந்துள்ளது. பர்ட்ஸே பகுதியில் தற்போது இந்திய ராணுவம் புதிய கண்காணிப்புக் கோபுரத்தை அமைத்துள்ளது. அதில் இருந்த ராணுவத்தினர், சீனப் படையினரின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து படையினரை உஷார்படுத்தினர்.
இந்தப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு எல்லைக் கோட்டுக்கு உள்ளே இந்திய எல்லைக்குள் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை சீனப் படையினர் ஊடுறுவி வந்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படையினர் தங்களது முகாமிலிருந்து வெளியே வந்தனர். ஆனால் சீன ராணுவத்தினர் திரும்பிப் போகவில்லை.
அதேபோல திங்கள்கிழமையும் சீனப்படையினர் அங்கு முகாமிட்டனர். ஆனால் இந்த முறை நடமாட்டம் இல்லாமல் கீழே கொடி பிடித்தபடி உட்கார்ந்திருந்தனர். அந்தக் கொடியில், இது சீனப் பகுதி, திரும்பிப் போ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து இரு தரப்பு ராணுவத்திற்கிடையே பேச்சுக்கள் நடந்தன. இருப்பினும் சீனப் படையினர் திரும்பிச் செல்வதாக இல்லை. இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. இதையடுத்து இந்தியப் படையினர் தங்களது முகாமுக்குத் திரும்பிச் சென்று உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று உதம்பூர் ராணுவ செய்தித் தொடர்பாளர் கோஸ்வாமி கூறியுள்ளார்.