எல்லையில் 25 கி.மீ தொலைவுக்கு சீனா ஊடுருவியதா? இந்திய ராணுவம் மறுப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் சீன ராணுவம் 25 கி.மீ தொலைவுக்கு ஊடுருவியதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது.
இந்திய எல்லையின் லடாக் அருகே இந்திய ராணுவத்தினர் ரோந்து சென்றபோது அங்கு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் முகாமிட்டிருந்ததை கண்டதாகவும் சீன படையினர் சுமார் 25 கி.மீ தொலைவுக்கு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை மீறியதாகவும் கூறப்பட்டது.
மேலும், இந்திய எல்லையில் ஒரு புதிய நிலையை ஏற்படுத்தி அங்கு 'இது சீனப் பகுதி, வெளியேறுங்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் சீன ராணுவத்தினர் அங்கு முகாமிட்டதாகவும் லே எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தகவல் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறவில்லை என்று இந்திய ராணுவ தளபதி தல்மீர் சிங் தெர்வித்துள்ளார். அது போன்ற எந்த சம்பவமும் எல்லையில் நடக்கவில்லை என்று கூறி உள்ளார்.
இந்திய ராணுவ உயர் அதிகாரி எஸ்.டி.கோஸ்சுவாமி கூறும்போது, இந்திய மற்றும் சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல்வேறு கோணங்களில் பார்க்கும்போது, எல்லைக் கட்டுபாட்டு பகுதி சற்று குழப்பம் ஏற்படுத்துவதாகவே இருக்கும். இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும்போது, வீரர்களுக்கிடையே எல்லையை பிரித்துப் பார்ப்பதில் குழப்பம் ஏற்படும்.
இதனால் எல்லையை மீறும் சம்பவங்களும் நடக்கும். தற்போது, இந்திய எல்லைப் கட்டுப்பாட்டுப் பகுதியில், சீனா அத்துமீறவில்லைஎன்றார்.